economics

img

உலக வைர சந்தையில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

தங்கம், வெள்ளியை அடுத்து மூன்றாவது உலோகமாக மக்கள் விரும்பி வாங்குவது வைரம் தான். இந்நிலையில் உலக சந்தையில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது என தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சிலின் தலைவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பின் போது உலக அளவில் வைர சந்தை மிகவும் மோசமாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக மீண்டு வருவதால் வைர வியாபாரத்தின் வளர்ச்சி அதிகரித்து வருவதாக தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில் தலைமை நிர்வாகி டேவிட் கெல்லி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். உலக அளவில் தற்போது வைரத்தின் தேவை அதிகரித்துள்ளது என்றும், இதனால் வைர வியாபாரம் எதிர்பார்ப்பையும் தாண்டி நல்ல நிலையில் உள்ளது. தற்போது ஷோரூம்கள் தங்கம், வெள்ளி மட்டுமின்றி வைரத்திற்கு என தனிப்பிரிவுகள் பல கடைகளில் ஆரம்பித்துள்ளது வைர வியாபார துறையில் ஒரு நல்ல வளர்ச்சி எனவும் டேவிட் கெல்லி தெரிவித்தார்.  

உலக அளவில் வைர வியாபாரத்தில் நம்பர் ஒன் இடத்தில் அமெரிக்கா தான் உள்ளது. அந்நாடு உலக வைர சந்தையில் சுமார் 50 சதவிகித வைரத்தை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவை அடுத்து வைரச்சந்தையில் சீனா உள்ளது. அந்நாடு உலக அளவில் 16 முதல் 17 சதவிகிதம் வரை விற்பனை செய்து வருகிறது.  அமெரிக்கா, சீனாவை அடுத்து உலக வைரசந்தையில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது 5 முதல் 6 சதவிகிதம் வைரங்களை இந்தியா விற்பனை செய்து வந்தாலும் வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இன்றைய காலத்தில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் இளம் பெண்கள் வைர நகை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கூறும் இந்திய வைர வியாபாரிகள், மண்ணில் வெட்டி வெட்டி எடுக்கும் வைரங்கள் தவிர ஆய்வகத்தில் செய்யப்படும் வைரங்களுக்கும் உலக அளவில் ஒரு தனி இடம் கிடைத்து வருவதாகவும், இது வைர வியாபார சந்தையில் ஒரு மிகச்சிறந்த அம்சமாகவே பார்க்கப்படுகிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.